பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா?
பின்னணியில் ரஜினி?
திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா அண்ணாமலையின் அரசியல் கோதா?
விஜய்க்கு எதிரான வியூகத்தை உற்றுநோக்கும் திமுக; தவிப்பில் அதிமுக!
அண்ணாமலை தனி ஆவர்த்தனத்தின் பின்னணியில் ரஜினி ரகசியம்?
பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை அடுத்து ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சி அல்லது இயக்கத்தின் பின்னணியில் ரஜினி காந்த் இருப்பதாக வெளியாகும் அரசியல் ஆருடங்கள், தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கி வருகின்றன. திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தின் ஆட்சி பீடத்தை தட்டிப்பறித்ததில், பாஜகவின் நோக்கத்தை ஈடேற்றி இருக்கிறார் ஜோசப் விஜய்.
அடுத்த சுற்றில் விஜயுடன் போராடி அந்த பீடத்தை கைக்கொள்வதே அண்ணாமலையின் அரசியல் இலக்கு. இதற்காக பாஜக தேசியத் தலைவர்களின் ஆசிகளுடன், தமிழகத்தில் தனி ஆவர்த்தனம் காண்கிறார் அண்ணாமலை. தவெக, திமுக ஆகியவற்றை பின்தள்ளி, அதிமுக, நாதக ஆகியவற்றை தவிக்க விட்டு, தமிழக அரசியலில் புதுப்பாய்ச்சலுக்கு எத்தனிக்கும் அண்ணாமலையின் முயற்சி நடைமுறையில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதுதான் தமிழக அரசியலில் முக்கிய கேள்வியாக தொக்கி நிற்கிறது.
அண்ணாமலையின் அரசியல் எழுச்சி
கர்நாடக மாநிலத்தில் பரபரப்பான ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்த அண்ணாமலை, அப்பணியை துறந்து தடாலடியாக தமிழக பாஜகவில் இணைந்தார். எடுத்த எடுப்பில் மாநிலத் துணைத்தலைவர் பதவி, எல்.முருகனை மத்திய இணை அமைச்சராக்கி அவர் வகித்த தமிழக பாஜக தலைவர் பதவியை அண்ணாமலைக்கு தாரைவார்த்தது என அறிமுகத்திலேயே அரசியல் களத்தை அதிர வைத்தார். பாஜக டெல்லி தலைமையும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் அண்ணாமலையை முன்னிலைப்படுத்தியது.
அண்ணாமலையும் அதற்கேற்ப தமிழக பாஜகவை மாற்று அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்க முயற்சித்தார். திமுக, அதிமுக என திராவிட கட்சிகளின் முதுகில் பயணிப்பதே தேசிய கட்சிகளின் தலைவிதி என்ற நிலையை மாற்றி, தனி சக்தியாக பாஜகவை தமிழ்நாட்டில் முன்னிலைப்படுத்த முயன்றார். ஆனால் அதற்காக அவர் முன்னெடுத்த அரசியல் உள்ளடிகள் சர்ச்சைக்கும் ஆளாயின.
கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக அமைச்சர்கள் ஊழலுக்கு எதிராக ஆன்லைனில் அவர் வெளியிட்ட ஆதாரங்கள் முதல் நீதிமன்றங்களில் எதிர்கொண்ட வழக்குகள் வரை சகலமும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிமுகவை பின்தள்ளி திமுக எதிர்ப்பரசியலில் முன்நின்றார். அதற்காக கூட்டணி கட்சியான அதிமுகவை சீண்டவும் அவர் தயங்கவில்லை. அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் மட்டுமன்றி, எடப்பாடியாரை அவர் விமர்சித்த விதமும் கூட்டணிக்கு வேட்டு வைத்தன.
அண்ணாமலையின் புதிய புறப்பாடு
அண்ணாமலையால் வெறுப்பேறிய அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கிறது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என்ற எடப்பாடியாரின் நெருக்கடி வேலை செய்தது. அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலை நீக்கப்பட்டு, அவரது தமிழக பாஜக தலைவர் இருக்கையில் நயினார் நாகேந்திரன் அமர்த்தப்பட்டார்.
அதற்காகவே காத்திருந்த அண்ணாமலைக்கு எதிரான தமிழக பாஜக லாபி அதன் பின்னர் தீவிரமாக வேலை செய்தது. தமிழக அரசியலிலும், மத்திய அரசியல் மற்றும் அதிகாரத்திலும் அண்ணாமலை நுழைய முடியாதபடி காய் நகர்த்தினார்கள். அதன் பொருட்டு, ஆருத்ரா ஆயிரம் கோடி மோசடி வழக்கு, சொந்த கட்சித் தலைவர்களுக்கு எதிரான ஆடியோ – வீடியோ மிரட்டல்கள், திமுக அமைச்சர்களுடனான திரைமறைவு நெருக்கம், சேர்த்த சொத்துக்கள் உள்ளிட்ட புகார்கள் எப்படியோ பொதுவெளியில் கசிய ஆரம்பித்தன.
இந்த சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் அதிரடி விஜயம், தமிழகத்தின் சகல கட்சிகளும் தங்களது அரசியல் முன்னெடுப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று. இந்த வகையில் அண்ணாமலையும் தனி ஆவர்த்தனமாய் அரசியலில் களமிறங்க முடிவு செய்தார். திராவிட கட்சிகளின் 60 ஆண்டு தமிழக ஆளுகைக்கு முடிவுரை எழுத வேண்டும் என்ற பாஜகவின் நோக்கத்தை தவெக விஜய் சுலபமாக சாத்தியமாக்கி விட்டார். தற்போது மீண்டும் அரசியல் அதிகாரம் திராவிட கட்சிகள் வசம் திரும்பாது பார்த்துக்கொள்வதோடு, அதனை விஜயிடமிருந்து தட்டிப்பறிப்பதுதான் பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வாக இருக்க முடியும்.
விறுவிறு வியூகங்கள்
அதற்காக மீண்டும் தன்னை தமிழக அரசியலில் முன்னிறுத்துவார்கள் என எதிர்பார்த்து அண்ணாமலை ஏமாந்தார். அதே போன்று விஜய் போன்று இளம் வாக்காளர்களை வசீகரிப்பதன் மூலம் மாற்று அரசியல் சக்தியாக வளரவும் தன்னால் முடியும் என நம்பினார். விஜய் போன்ற ரீல் ஹீரோ முதல்வராகும்போது, ஐபிஎஸ் ரியல் ஹீரோவாக வலம் வந்த அண்ணாமலையை மக்கள் ஆதரிக்க மாட்டார்களா என தனது ஆதரவாளர்கள் ஆதங்கத்திலும் அவர் நியாயம் கண்டார். ஆனால், தீவிர பாஜக எதிர்ப்பில் ஊறிப்போன தமிழ்நாடு அரசியலில் அதற்கான மாற்றத்தை பாஜகவில் இருந்தபடியே நிகழ்த்த முடியாது என்பதையும் அண்ணாமலை உணர்ந்திருந்தார்.
