பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பெரம்பலூர்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று (18.05.2026) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாழ்வாதாரம் பாதிப்பு
பெரம்பலூர் காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகச் சீர்குலைந்து வருகிறது. மக்களின் சுமையைக் கூட்டாமல், இந்த விலை உயர்வை மத்திய மோடி அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பு
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு (CITU) மாவட்ட நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். எல்.பி.எஃப் (LPF) சார்பாக கே.கே.குமார், யு.டி.யு.சி (UTUC) சார்பாக கணி, ஏஐடிஇயுசி (AITUC) சார்பாக ராஜேந்திரன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் ரெங்கநாதன், ரெங்கராஜ், கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குமாரவேல், கனகராஜ், எல்.பி.எஃப் செல்லதுரை, ரெங்கநாதன் உள்ளிட்ட திரளான தொழிலாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனக் குரலை வலுவாகப் பதிவு செய்தனர்.
